அன்னூர் வட்டம், மசக்கவுண்டன் செட்டிபாளையம் கிராமத்திற்குட்பட்ட பொன்னே கவுண்டன் புதூரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட (NSS) முகாம் தொடர்பாக கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் முதல் தலைமுறை வாக்காளர்கள் என்பதால், தேர்தலில் 100% வாக்களிப்பை உறுதிசெய்யும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியின் போது, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் உறுதிமொழி மாணவர்களால் ஏற்கப்பட்டது.
மாணவர்களிடம் வாக்குரிமையின் முக்கியத்துவம் மற்றும் ஜனநாயகத்தில் வாக்களிப்பின் அவசியம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மேலும், அப்பகுதி மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மேலும், தாங்களும் தங்கள் குடும்பத்தினரும், சுற்றுப்புற மக்களும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்ற உறுதியை மாணவர்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், அன்னூர் தெற்கு நில வருவாய் ஆய்வாளர், வட்டத் துணை ஆய்வாளர், மசக்கவுண்டன் செட்டிபாளையம் மற்றும் காரேகவுண்டன் பாளையம் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர்.
இந்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வு, மக்களிடையே வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் சிறப்பான முயற்சியாக அமைந்தது.
“வாக்களிப்போம் – ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்!”
தமிழக குரல் கோவை மாவட்ட செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் கார்த்திக்...





No comments:
Post a Comment